செய்திகள்
பொன்முடி

விஜயகாந்தை சட்டசபையில் இழிவுபடுத்தியது அதிமுக- சி.வி.சண்முகத்துக்கு பொன்முடி பதில்

Published On 2019-10-04 05:17 GMT   |   Update On 2019-10-04 05:17 GMT
விஜயகாந்தை சட்டசபையில் இழிவுபடுத்தியது அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி பதில் அளித்துள்ளார்.
சென்னை:

முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் “நிதானம்” தவறி “விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் எங்கள் தலைவர் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்” என்று அநாகரிகமாகப் பேசியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் தலைவரை மட்டுமல்ல எங்கள் கட்சியில் உள்ள ஒரு தொண்டனைக் கூட அடையாளம் தெரியாமல் போக வைப்பதற்கு எந்தக் கொம்பனும் தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதை அமைச்சர் யோசித்துப் பார்க்க வேண்டும்.

“ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சி தே.மு.தி.க.” “எங்களால்தான் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவரானார்” “அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் 2011-ல் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார்” என்றெல்லாம் விமர்சித்தவர்கள் வேறு யாருமல்ல அ.தி.மு.க. அமைச்சர்கள்தான்.



2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு வர முடியாது என்று மறுத்து கோயம்பேட்டில் இருந்த விஜயகாந்தை “தூதுவர்களை” அனுப்பி “கெஞ்சிக் கூத்தாடி” அழைத்து வந்து கூட்டணி வைத்தது அ.தி.மு.க.தான். இவ்வளவும் செய்துவிட்டு கூட்டணியில் வெற்றியும் பெற்று சட்டமன்றத்திற்கு வந்தவுடன் விஜயகாந்தை வசைபாடி அவர்களின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் நீக்கி விஜயகாந்தை அசிங்கமான சைகைகள் மூலம் கேவலப்படுத்தியவர்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்தான்.

அப்போது முதல்- அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, “தகுதியில்லாதவர்களுக்கு பதவி திடீரென்று வந்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜயகாந்த்.

தே.மு.தி.க. கூட்டணியில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்” என்று சட்டமன்றத்திலேயே பேசி விஜயகாந்தை கொச்சைப்படுத்தியதை அமைச்சர் சி.வி. சண்முகம் மறந்து விட்டாரா?

அமைச்சர் சி.வி. சண்முகம் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் தலைவர் மீது பாய்ந்து பிராண்ட நினைத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் “அமைச்சர் பதவி” என்ற அகங்காரம் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே செயல்வீரர்கள் கூட்டத்தில் “இந்த தேர்தல் தான் நமக்குக் கடைசி தேர்தல்” என்ற உண்மையை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு நன்றி. கடந்த இரு வருடங்களாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சில நாட்கள் மிரட்டி பல நாட்கள் பாராட்டியும் அடிக்கும் கொள்ளைகளுக்கு “தேதி குறிக்கப்பட்டு விட்டதே” என்ற எரிச்சலில் எங்கள் தலைவரைப் பார்த்து பேசுவோரை தி.மு.க. தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை சி.வி. சண்முகம் உணர வேண்டும்.



விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாகரிகமான முறையில் தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகத்தை கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இது போன்று எங்கள் தலைவரை வம்புக்கு இழுத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தெருவுக்கு தெரு கூட்டம் போட்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஊழல் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு பொன்முடி கூறி உள்ளார்.
Tags:    

Similar News