செய்திகள்
ஒரே பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
இந்தியாவின் சட்ட அமைப்புகளும், சமூக மாண்புகளும் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பதில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரே பாலின (ஆண்கள்- ஆண்கள், பெண்கள் - பெண்கள்) திருமணங்களை அங்கீகரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தார், நம் நாட்டின் சட்டங்கள், சட்ட அமைப்பு மற்றும் சமூகம் ஆகியவை ஒரே பாலின தம்பதியரை அங்கீகரிப்பதில்லை எனவும், இதனால் இந்தத் திருமண முறையை ஏற்க இயலாது எனவும் குறிப்பிட்டார்.
தண்டனை மற்றும் நிவாரணம் வழங்குவதில் ஆண், பெண் இடையே பல்வேறு வேற்றுமைகள் உள்ள திருமணச் சட்டத்தில், ஓரின திருமணத்தில் யாரை கணவன், மனைவியாக கருதமுடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் 2018-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஓரின சேர்க்கையை குற்றமல்ல என்றுதான் கூறியதாகவும், அதைத்தாண்டி அத்தீர்ப்பில் வேறு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த டெல்லி உயர்நீதிமன்றம், அக்டோபர் 21-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.