செய்திகள்
அசோக் கஸ்தி எம்.பி.

கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்திக்கு கொரோனா

Published On 2020-09-15 02:17 GMT   |   Update On 2020-09-15 02:17 GMT
கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சிலர் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் அசோக் கஸ்தி. பா.ஜனதாவை சேர்ந்த இவர் ராய்ச்சூரை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் அசோக் கஸ்தி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், சளி தொல்லை இருந்தது. மேலும் அவருக்கு கொரோனா அறிகுறியும் தென்பட்டது.

இதையடுத்து அசோக் கஸ்தி தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சைக்காக, அசோக் கஸ்தி பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அசோக் கஸ்தியின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News