செய்திகள்
தற்கொலை

வெள்ளோடு அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-04-30 18:27 GMT   |   Update On 2021-04-30 18:27 GMT
வெள்ளோடு அருகே தாய்க்கு தெரியாமல் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னிமலை:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அரிகவாரிபள்ளி காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகள் ரம்யா (23). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.

வெள்ளோடு அருகே உள்ள அனுமன்பள்ளியை சேர்ந்தவர் அன்பழகன். இவரும், ரம்யா வேலை பார்த்த மில்லில் வேலை பார்த்தார். அப்போது அன்பழகனுக்கும், ரம்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அதன்பின்னர் ரம்யா கடந்த 15 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு் வெளியேறி தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அனுமன்பள்ளியில் வசித்து வந்தார்.

ரம்யா கடந்த 22-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று, தான் காதல் திருமணம் செய்த விஷயத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் மீண்டும் அனுமன்பள்ளியில் உள்ள கணவன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து 25-ந் தேதி இரவு ரம்யாவை அவரது கணவர் அன்பழகன் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனம் உடைந்த ரம்யா 27-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரம்யா இறந்தார்.

இதுகுறித்து ரம்யாவின் தாய் சாந்தி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ரம்யாவுக்கு திருமணமாகி 15 மாதங்களே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீனும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News