செய்திகள்
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் - இறுதி முடிவுகள் அறிவிப்பு
150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 55 இடங்களை கைப்பற்றியது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
வாக்குச்சீட்டு முறைபடி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கியது. வாக்குச்சீட்டு முறை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், 150 வார்டுகளுக்கான ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 55 இடங்களில் வெற்றி
பாஜக - 48 இடங்களில் வெற்றி
அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) - 44 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 2 இடங்களில் வெற்றி
என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 150 வார்டுகளில் 76 இடங்களை கைப்பற்றினார் பெரும்பான்மையுடன் செயல்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - எஐஎம்ஐஎம் கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்:-
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 99
எஐஎம்ஐஎம் - 44
பாஜக - 4
காங்கிரஸ் - 2
தெலுங்கு தேசம் - 1
2016-ல் 4 இடங்களை கைப்பற்றிய பாஜக தற்போது 48 இடங்களை கைப்பற்றி இந்த தேர்தலில் 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.