செய்திகள்
11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 9-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைகின்றன. இவற்றில் உத்தர பிரதேசத்தில் 10 இடங்களும், உத்தரகாண்டில் ஓரிடமும் காலியாகும்.
மேலவை எம்.பி. பதவிக்கான இடங்கள் காலியாகும் சூழலில் அவற்றை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பினை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 11-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல் வருகிற நவம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் வாக்கு பதிவும் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
ஓட்டுப்பதிவு காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் நடைபெற்று முடிவடையும். அதன்பின், மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.