உள்ளூர் செய்திகள்
கோவையில் தொழிலாளியை தாக்கி பஸ்சில் இருந்து தள்ளி விட்ட கண்டக்டர்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
மதுரையை சேர்ந்தவர் பெத்துகாளை (வயது 31). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் கோவை வந்தார். பின்னர் இடையர்பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று பெத்துகாளை மதுரை செல்வதற்காக காந்திபுரம் பஸ் நிலையம் வந்தார். அங்கு இருந்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் செல்ல தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ் பீளமேடு சென்று கொண்டு இருந்தபோது கண்டக்டர் பஸ்சில் இருந்த ஒரு பெண்ணிடம் பேசி கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த பெத்து காளை அவர்களை ஏதற்காக பேசி கொண்டு இருக் கிறீர்கள் என தட்டி கேட்டார்.இதனால் பெத்துகாளைக்கும் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த பஸ் கண்டக்டர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். பின்னர் பஸ்சில் இருந்து பெத்துகாளையை கீழே தள்ளி விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பெத்துகாளை பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பஸ் கண்டக்டர் சூலூரை சேர்ந்த ரஞ்ஜித்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.