உள்ளூர் செய்திகள்
கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் அரசின் ஓராண்டு திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம்- கலெக்டர் தலைமையில் நடந்தது

Published On 2022-05-05 11:20 GMT   |   Update On 2022-05-05 11:20 GMT
ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்ட மிடுவது குறித்து, ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று நாளை (6ந் தேதி) ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இதையொட்டி ஓராண்டில் அரசின் அரும்பணிகள், சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்ட மிடுவது குறித்து, ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:

அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி நடத்துவது குறித்தும் அதில் தங்கள் துறைகளில் கடந்த ஓராண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து கண்காட்சியில் இடம் பெறச்செய்தல், பல்துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல், மாணவ, மாணவிகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், பல்வேறு கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சி மேற்கொள்வது குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.

தொடர்ந்து, அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பான பணிகளை மேற்கொண்டு பொதுமக்களை திரளாக இக்கண்காட்சிகளில் பங்கேற்கச் செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓராண்டு சாதனைகளை அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) வேல்விழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News