செய்திகள்

சாத்தான்குளத்தில் வாழைகள் கருகி நாசம்: மர்ம நபர்கள் தீ வைத்தனரா? போலீசார் விசாரணை

Published On 2019-04-25 14:49 GMT   |   Update On 2019-04-25 14:49 GMT
சாத்தான்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் சாலைப்புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). விவசாயியான இவர் இந்து முன்னணி மாவட்ட தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் பேய்க்குளம் பழனியப்பபுரம் சாலையில் உள்ளது. அங்கு பெரும்பாலான வாழைகள் குழை தள்ளி, அறுவடைக்கு தயாராக இருந்தன. 

 இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த வாழைத்தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று தோட்டம் முழுவதும் பரவியது. 

இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் சுமார் 1,000 வாழைகள் தீயில் கருகி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து முருகேசன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், தனது தோட்டத்துக்கு மர்மநபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்று தெரிவித்தார். இதன் பேரில் வாழைத் தோட்டத்திற்கு யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News