தொழில்நுட்பம்
வீட்டில் இருந்தபடி மொபைல் வாங்க புதிய திட்டத்தை துவங்கிய விவோ
வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி மொபைல் போன் வாங்க விவோ நிறுவனம் புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது.
புதிய மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென புதிய திட்டத்தை விவோ நிறுவனம் துவங்கி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டுக்குள் இருந்து கொண்டே புதிய போன் வாங்கிக் கொள்ள முடியும். நாடு முழுக்க பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கின் போது சில தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விவோ புதிய திட்டம் அமலாகி இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய திட்டத்தின் படி மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் சந்தேகங்களை விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கேட்க முடியும். வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விவோ அதிகாரி பதில் அளித்து, புதிய போன் வாங்குவதற்கான உதவியை வழங்குவர்.
எஸ்எம்எஸ் சார்ந்த கனெக்டிவிட்டி மூலம் இயங்கும் புதிய திட்டம் மே 12 ஆம் தேதிக்குள் முழுமையாக அமலாகிவிடும் என விவோ இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்றும் ஆஃப்லைன் மூலமாகவே புதிய மொபைல் வாங்க நினைக்கின்றனர்.
எனினும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், ஊரடங்கு நிறைவுற்ற பின்பும் பல வாடிக்கையாளர்கள் வெளியில் வர தயக்கம் காட்டலாம். இதன் காரணமாகவே புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வியாபாரத்தை நடத்த முடியும் என விவோ நிறுவனத்தின் நிபுன் மரியா தெரிவித்தார்.
ஏதேனும் காரணத்திற்காக வெளியில் வராமல் புதிய போன் வாங்க நினைப்போருக்காக புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. வெளியில் சென்று புதிய போன் வாங்க நினைப்போரும் அவ்வாறு செய்ய முடியும்.