செய்திகள்
சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த 1,500 பேர் திடீர் மாயம்
சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு அதில் உறுதி செய்யப்பட்ட 1,500 பேரை காணவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரிசோதனை செய்து கொண்டு அதில் உறுதி செய்யப்பட்ட 1,500 பேரை காணவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களில் மாவட்டம் முழுவதும் 9,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 7,270 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ளவர்கள் விவரம் தெரியவில்லை. தொற்று பரிசோதனையின்போது அவர்கள் அளித்த முகவரிகளில் தொற்றாளர்கள் இல்லை. அவர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டால் அது தவறாக உள்ளது. சில எண்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்கள் தவறான செல்போன் எண்ணை கொடுத்துள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தொற்று பாதித்தவர்கள் வெளியில் சுற்றித் திரிந்தால் பலருக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.