பெண்கள் உலகம்
சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்

மனதை மகிழ்விக்கும் மந்திரம்: சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்

Published On 2022-02-18 07:31 GMT   |   Update On 2022-02-18 07:31 GMT
சிறு வயதில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகத்தான் அனைவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக நகர்ந்திருக்கும். இதெல்லாம் திரும்ப கிடைக்குமா? இனி அப்படி அனுபவிக்க முடியுமா? என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
சின்ன சின்ன ஆசைகள் சில நேரங்களில் அதிக மகிழ்ச்சியை தேடித்தரும். அவை நிறைவேறும்போது மனம் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறக்கும். ஆனால் சாதாரண ஆசைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள நேரமின்றி தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். யாராவது எதுவும் நினைத்து விடுவார்களோ, இன்னும் குழந்தை தனமாகவே இருப்பதாகவே மற்றவர்கள் கருதிவிடுவார்களோ என்ற கவலை அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். ஆனால் சின்ன சின்ன ஆசைகளில்தான் மனம் பெரிய அளவில் ரிலாக்ஸாகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த கஷ்டமும் இன்றி மனம் இயல்பாக இருக்கும்போது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். அதற்கு குடும்பத்தினரோ, மற்றவர்களோ முட்டுக்கட்டை போடக்கூடாது.

சிறு வயதில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகத்தான் அனைவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக நகர்ந்திருக்கும். இதெல்லாம் திரும்ப கிடைக்குமா? இனி அப்படி அனுபவிக்க முடியுமா? என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காரணம் அந்த பருவத்தில் எந்த ஆசைக்கும் தடை இருந்ததில்லை. பொழுதை சந்தோஷமாக கழிப்பதற்கு நிறைய நேரமும் கிடைத்திருக்கும். விளையாடுவதற்கு, பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு நண்பர்கள் எப்போதும் உடன் இருந்திருப்பார்கள். இப்போது அதெல்லாம் ‘மிஸ்ஸிங்’. சிறுவர்கள் மழையில் நனைந்தால் அது ஜாலி. பெரியவர்கள் நனைந்தால் அது கேலியாகிவிடும். ஆனால் வெளிநாடுகளில் இப்படி சின்ன சின்ன விஷயங்களை செயல்படுத்தித்தான் மனதை மகிழ்விக்கிறார்கள். அந்த சமயத்தில் மனம் எந்த பாரத்தையும் சுமக்காமல் மகிழ்ச்சியில் திளைக்கும். அந்த மகிழ்ச்சிதான் மனிதனை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ வைக்கிறது என்று நம்புகிறார்கள்.

காற்றாடி விடும் போட்டி பல நாடுகளில் நடத்தப்படுகிறது. சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் உற்சாகப்படுத்தும் போட்டி இது. பெரிய மைதானத்தில் எல்லோரும் ஒன்று கூடி பல வண்ண காற்றாடிகளை உயரே பறக்க வைப்பதற்கு போட்டி போடும்போது மனமும் சிறகடித்து பறக்கும். இந்த போட்டியில் பெரியவர்களையும் பங்குபெற செய்ய வேண்டும் என்பதே போட்டியாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஏனெனில் காற்றாடி பறக்க விடுவது அவர்களின் குழந்தை பருவத்தை திருப்பி பார்க்க வைக்கும். ஒரு இனம் புரியாத உற்சாகத்தை மனதுக்குள் நிரப்பிவிடும். இதுதான் சின்ன சின்ன ஆசைகளில் கிடைக்கும் ஆனந்தம். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கு மருந்து கிடையாது. இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகள்தான் உற்சாக பானமாக அமையும். சைக்கிள் ஓட்டுவது, ஊஞ்சல் ஆடுவது இதுபோன்ற ஆசைகள் சிறு வயதை ஞாபகப்படுத்தும். ஆனால் ஒருசில ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வயது இடம் தராது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு இந்த ஆத்மார்த்தமான உற்சாகம் உதவி செய்கிறது. வாழ வேண்டும் என்ற ஆசையையும், மனதில் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொடுப்பது இந்த சின்ன சின்ன ஆசைகள்தான்.

சிறு வயது பருவத்தை நினைத்து பார்க்கும்போது பலருக்கும் இப்போது எதையோ இழந்து விட்டது போன்றதொரு ஏக்கம் தோன்றும். அந்த ஏக்கம் ஏற்கனவே இருக்கும் மன அழுத்தத்தை அதிகமாக்கும். நாம் ஏதோ வேலை செய்வதற்கென்று உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை போல தோன்றும். இத்தகைய வெறுமை உணர்வை விரட்டுவது சின்ன சின்ன ஆசைகள்தான். வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை. நம் மகிழ்ச்சி நம்மிடம்தான் உள்ளது என்ற எண்ணத்தை சின்ன சின்ன ஆசைகள்தான் உருவாக்கும். உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தித் தரும். இதுதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை.

வெளிநாடுகளில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்களில் மனம் புத்துணர்ச்சி பெறுவதற்கென்று பெரிய கூடம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள், பந்து, பலூன், கத்திரிக்கோல், காகிதம், கைவினை பொருட்கள் என சிறுவயது வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும் பொருட்கள் இடம் பெற்றிருக்கும். யார் எது வேண்டுமானாலும் விளையாடலாம். காகிதங்களை வெட்டி பூவேலைப்பாடுகள் செய்யலாம். கைவினை பொருட்களை பயன்படுத்தி கலை பொருட்களை உருவாக்கலாம். சித்திரம் வரையலாம். பந்துகளை உருட்டி விளையாடலாம். மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தி கொடுக்கும் விளையாட்டுக்களை தேர்வு செய்து விளையாடலாம். பாட வகுப்புகளுக்கு இடையே இதற்கென்று சிறிது நேரம் ஒதுக்கப்படுகிறது. இது நேரத்தை விரயம் செய்வது போல தோன்றலாம். ஆனால் நிச்சயமாக அப்படி இல்லை. இது ஒரு அறிவியல் ரீதியான மன சிகிச்சை. மனம் லேசாகும்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சிறு வயது நண்பர்களை சந்தித்து பேசுவது இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுவயதில் செய்த குறும்புகளை சொல்லி மகிழலாம். அப்போது கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது. சின்ன சின்ன ஆசைகள் என்பது அனைத்து வயதினரிடமும் குடிகொண்டிருக்கும். அவை நிறைவேறாதபோது மகிழ்ச்சியை தொலைத்தது போன்ற உணர்வு உண்டாகும். ஒருவித சோர்வு ஏற்படும். அதனால் சின்ன சின்ன ஆசைகளை தட்டிக்கழிக்க வேண்டாம். அவை உங்கள் மகிழ்ச்சியை திருப்பிக்கொடுப்பவை.
Tags:    

Similar News