தொழில்நுட்பம்
கேள்விக்குறியாக நிற்கும் டிக்டாக் அமெரிக்க உரிமம்
டிக்டாக் அமெரிக்க உரிமத்தை எந்த நிறுவனம் கைப்பற்ற இருக்கிறது என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமத்தை வழங்க பைட்-டேன்ஸ் நிறுவனம் நிராகரித்து இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் பத்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் டிக்டாக்கை வாங்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வந்தன. இந்நிலையில், டிக்டாக் அமெரிக்க உரிமம் ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இந்த தகவல் குறித்து டிக்டாக், வெள்ளை மாளிகை மற்றும் ஆரக்கிள் என எந்த தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வழங்கப்படவில்லை.
முன்னதாக சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு விதித்து இருந்தார்.
இதன்படி அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது டிக்டாக் செயலியை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கான காலவரையறை செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிகிறது.