வழிபாடு
சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை

Published On 2022-02-12 04:13 GMT   |   Update On 2022-02-12 04:13 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 5-ம் திருநாளான நேற்று சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். 5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

6-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணியளவில் சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

*7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் உருகுசட்ட சேவை நடக்கிறது. பின்னர் 8.30 மணியளவில் சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

8-ம் திருநாள் (திங்கள்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 12 மணிக்கு மேல் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News