செய்திகள்
கொள்ளை

மயிலாடுதுறை அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே என்ஜின் டிரைவர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை

Published On 2021-06-05 16:10 GMT   |   Update On 2021-06-05 16:10 GMT
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் ஓய்வு பெற்ற ரெயில்வே என்ஜின் டிரைவர் வீட்டில் 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு லட்சுமி நகரில் வசித்து வருபவர் சுவாமிநாதன் (வயது 79). இவர் ரெயில் என்ஜின் டிரைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி இறந்துவிட்டார். இந்தநிலையில், இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 9-ந் தேதி கோவையில் உள்ள இளைய மகன் செந்தில்குமார் வீட்டிற்கு சென்ற சுவாமிநாதன், ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று மாலை சுவாமிநாதன் ஊர் திரும்பினார்.அப்போது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News