செய்திகள்
மடத்துக்குளம் பகுதியில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் தீவிரம்
வழக்கமாக 2.5 டன் மகசூல் கிடைக்கும். நடப்பு குறுவை சாகுபடியில் 3 முதல் 3.5 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நெல் பிரதான பயிராக உள்ளது. குறுவை, சம்பா என 2 பருவத்தில் இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு குறுவை சாகுபடியில் கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது :
குறைந்த வயதுடைய நெல் ரகங்களான ஏ.டி.டி (ஆர்) 45, கோ 51, கோ (ஆர்) 50, ஏ.எஸ்.டி. 16, ஏ.டி.டி. 37, உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. நடப்பு பட்டத்தில் பருவநிலை சீராக இருந்ததால் பயிர்கள் நன்கு வளர்ந்து உள்ளன. வழக்கமாக 2.5 டன் மகசூல் கிடைக்கும் .
நடப்பு குறுவை சாகுபடியில் 3 முதல் 3.5 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணத்தால் எந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்கிறோம் என்றனர்.