செய்திகள்
கோப்புபடம்

18 வயது நிறைவடையாத சிறுமிகளை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை - கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை

Published On 2021-03-24 14:51 GMT   |   Update On 2021-03-24 14:51 GMT
18 வயது நிறைவடையாத சிறுமிகளை இளம்வயது திருமணம் செய்யும் ஆண்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
 நாமக்கல்:

குழந்தைகளுக்கு எதிரான குற்றமான குழந்தை திருமண தடை சட்டத்தின்படி, 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆண்களுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும்.

இந்த சட்டத்தின்படி இளம்வயது திருமணம் செய்யும் ஆண்களுக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருப்போருக்கும் திருமணத்தை நடத்தி வைப்போருக்கும் இந்த சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

திருமணம் என்ற பெயரில் 18 வயது நிறைவடையாத சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்து கொண்டால் கடுமையான சிறை தண்டனையும் மற்றும் அபராத தொகையும் கட்ட நேரிடும். மேலும் 18 வயது நிறைவடையாத சிறுமிகள் கர்ப்பம் அடைந்தால் அந்த சிறுமிகளின் கர்ப்பப்பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகள் சரிவர வளர்ச்சியடையாமல் இருக்கும். இதனால் கருச்சிதைவு, உடல் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாகவே வாய்ப்புகள் அதிகம். மேலும் பிரசவிக்கும் பெண் குழந்தைக்கும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு இளம்வயது திருமணம் நடைபெற்றாலோ, நடைபெற போவதாக அறிந்தாலோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அல்லது சமூக நல அலுவலரிடம் தெரிவிக்கலாம். இதேபோல் சைல்டுலைன் அமைப்பின் இலவச தொலைபேசி எண் 1098-க்கும் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News