செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி மூதாட்டி பலி
நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கரியன். இவரின் மனைவி சாந்தா (வயது 60). இவரும், தனது பேரன் வேதகிரி, உறவினர் ராம்பிரசாத் ஆகிய 3 பேரும் நேற்று மாலை ஒரு மொபட்டில் வீட்டில் இருந்து புறப்பட்டு லட்சுமிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ராம்பிரசாத் மொபட்டை ஓட்ட, இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.
வாணியம்பாடி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெலக்கல்நத்தம் தரைப்பாலத்தில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு கார் திடீரென அவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. அதில் 3 பேரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மூதாட்டி சாந்தா பரிதாபமாக உயிரிழந்தார். ராம்பிரசாத், வேதகிரி ஆகியோர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேதகிரி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.