செய்திகள்
முன்விரோத தகராறில் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- 4 பேர் கைது
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது இஸ்மாயில் (வயது 32), முகம்மது இமாம்அலி (21). சகோதரர்களான இவர்கள் மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளது.
நேற்று முன்தினம் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாமியானா கடை நடத்தி வரும் ரமேஷ் (33) அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றார். அங்கு இருந்த முகம்மது இமாம் அலி, முகம்மது இஸ்மாயில் இருவரும் முன்விரோதம் காரணமாக ரமேசிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அங்கிருந்து வந்த ரமேஷ், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீ (39), முத்து (40), பொன்னையா (26) ஆகியோரிடம் நடந்ததை கூறினார். பின்னர் மீண்டும் ஏரி பகுதிக்கு சென்ற 4 பேரும் முகம்மது இமாம்அலி, முகம்மது இஸ்மாயில் ஆகியோரிடம் இதுகுறித்து தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் முகம்மது இமாம் அலி, முகம்மது இஸ்மாயில் ஆகியோரை 4 பேரும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அண்ணன்-தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடைய மற்றொரு சகோதரர் இம்ரான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜீ, முத்து, பொன்னையா, ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.