செய்திகள்
நடிகர் விஜய்

ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது - நடிகர் விஜய் வலியுறுத்தல்

Published On 2019-09-15 02:04 GMT   |   Update On 2019-09-15 02:04 GMT
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:

குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (23). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நேற்று முன்தினம் பணி முடிந்து பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த இடத்திலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக, பிகில்  பட இசை வெளியீட்டு நிகழ்வின்போது ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் 19-ம் தேதி பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News