திருவல்லிக்கேணியில் பார்வையற்ற 2 பேரை குடிபோதையில் தாக்கிய போலீஸ்காரர் கைது
சென்னை:
திருச்சி காரிய மங்கலத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது36) காரைக்கால் கண்ணப்பூரை சேர்ந்தவர் தினேஷ் (28). இருவரும் பார்வையற்றவர்கள். சென்னையில் ஊதுபத்தி விற்பனை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு 9 மணி அளவில் திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலை-பாபு ஜெகஜீவன் ராம் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் தினேஷ் குமார் (39) மதுபோதையில் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது இருவரும் போலீஸ்காரர் தினேஷ் குமாரிடம் ஓ.வி.எம். தெரு எங்கு உள்ளது என்று கேட்டனர். அதற்கு போலீஸ்காரர் என்னிடமே வழிகேட்கிறீர்களா என்று ஆத்திரப்பட்டு அவர்களிடம் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை பிடுங்கி தாக்கினார்.
வலிதாங்க முடியாமல் அவர்கள் கூச்சல் போடவே அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் போலீஸ்காரரை தட்டிக்கேட்டனர். இதில் பொதுமக்களையும் போலீஸ்காரர் தினேஷ் குமார் தாக்க முயன்றார்.
இதையடுத்து பொது மக்கள் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். திருவல்லிக்கேணி போலீசார் அங்கு விரைந்து வந்து போலீஸ்காரர் தினேஷ் குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து போலீஸ்காரர் தினேஷ் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.