செய்திகள்
மீன் வளத்துறை அதிகாரியை பணிசெய்யவிடாமல் தடுத்த 12 பேர் மீது வழக்கு
கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட மீன் வளத்துறை அதிகாரியை பணிசெய்யவிடாமல் தடுத்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் மீன்வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நான் நேற்று நாட்டுப்படகு மூலம் கடலூர் துறைமுகம் அடுத்த ராசாபேட்டை கடல் பகுதியில் சுமார் 3 முதல் 4 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தேன்.
அப்போது கடலூர் துறைமுகம் அடுத்த சோனக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் முருகேசன், தேவனாம்பட்டினம் சேர்ந்த மணிமாறன் உள்ளிட்ட 12 பேர் வந்த விசைப்படகு, நான் சென்ற நாட்டுப்படகு மீது மோதுவது போல் வந்து, என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
எனவே என்னை பணி செய்ய விடாமல் தடுத்த 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். அதன்அடிப்படையில் முருகேசன், மணிமாறன் உள்பட 12 பேர் மீது கடலூர் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.