செய்திகள்
சம்பா சாகுபடிக்காக தாராபுரத்தில் 55 ஆயிரம் டன் விதை நெல் உற்பத்தி
விதை தரமாக இருந்தால் மட்டுமே மற்ற இடுபொருட்கள் பயனளிக்கும் என அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
தாராபுரம்:
சம்பா பருவ நடவு தொடங்க உள்ள நிலையில், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் சுப்பையா, விதை உற்பத்தியாளர்களுடன் தாராபுரத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மாநிலத்துக்கு தேவையான விதைநெல்லில் 70 சதவீதம் தாராபுரத்தில் உற்பத்தியாகிறது. விதை தரமாக இருந்தால் மட்டுமே மற்ற இடுபொருட்கள் பயனளிக்கும்.
குறுவை மற்றும் சம்பா பருவ சாகுபடிக்காக நடப்பாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 55 ஆயிரம் டன் விதைநெல் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 72 ஆயிரம் டன் அளவுக்கு விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
விரைவில் தொடங்க உள்ள சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான விதை நெல்லுக்கு சான்றுப்பணி முடித்து விரைவில் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்றார்.
மேலும் விதைச்சான்று அலுவலர் வசந்தாமணி, திருப்பூர் மாவட்ட உதவி இயக்குனர் மாரிமுத்து, இணை இயக்குனர்கள் மல்லிகா, வெங்கடாசலம், துணை இயக்குனர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசினர்.