கோவில்கள்
தொட்டியம் மதுரை காளியம்மன் திருக்கோவில்

தொட்டியம் மதுரை காளியம்மன் திருக்கோவில்

Published On 2022-03-24 07:49 GMT   |   Update On 2022-03-24 07:49 GMT
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.
சுவாமி : மதுரைகாளியம்மன் (அம்மன்)
தீர்த்தம் : காவிரி

தலச்சிறப்பு : இத்தலத்தில் ஆண்டு தோறும் ஆனித் திருமஞ்சனவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருமஞ்சனவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி மதுரைகாளியம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.

மதுரை காளியம்மன் கோவில் பங்குனித் “தேர்த் திருவிழா” காப்புகட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும். அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்படும். இதை தொடர்ந்து அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, மதுரை காளியம்மன் கோயில் முன்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும்.

முக்கிய நிகழ்ச்சியான சுமார் முப்பதடி உயரம் உள்ள ஓலை பிடாரி அம்மன், சுமார் இருபத்து ஒன்பது அடி உயரமுள்ள சின்ன தேர் மதுரைகாளியம்மன், திருத்தேர் தலை அலங்காரமும், அதன் பின் இரண்டு தேர்த்தூக்கும் நிகழ்ச்சி மூலம் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

தல வரலாறு : இத்தலத்தை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார். மதுரை மாநகரில் வீற்றிருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியம் சங்கம் புதரில் வந்து அமர்ந்தாள், அப்போது எசங்கராயண் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்து விட்டு பால் கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதருக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தது. இதனை அறியாத ஊர் மக்கள் மாட்டில் பால் கறந்தால் பால் வருவதில்லை. எனவே சங்கம் புதரில் கள்வர்கள் யாரோ பாலை கறந்து விடுகிறார்கள் என்று அரசனிடம் முறையிட்டனர்.

அரசன் தன் படை வீரர்களுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேடினார். அரசன் புதருக்குள் வாளை சொருகினான். சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது. உடனே மன்னன் அதிர்ந்து போனான். அவன் முன் ஸ்ரீ மதுரைகாளியம்மன் தோன்றினாள் (இன்றும் கருவறையில் உள்ள மதுரைகாளியம்மன் மேனியில் இக்காயத்தின் வடு உள்ளது). மனம் உருகி மன்னிக்கும்படி வேண்டி, தாயே உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறாய்? என்று மன்னன் கேட்டான்.

மதுரைகாளியம்மன் அரசனுடைய பட்டியிலிருந்து ஒரு மாட்டை காட்டி இந்த மாடு எங்கெல்லாம் சென்று சுற்றி வருகிறதோ? அதெல்லாம் எனக்கு சொந்தம், அதுவே எனது எல்லை என்று மதுரைகாளியம்மன் கூறினாள். மாடு பதினெட்டு பட்டி கிராமம் சுற்றி வந்து புதரில் நின்றது. 18 பட்டி மக்களும் என் பிள்ளைகள் என் அருள்பெற ஒரு அழகான கோவிலை அமைத்து என்னை வழிபட வகை செய்வாயாக என்று கூறி ஸ்ரீ மதுரைகாளியம்மன் மறைந்தாள். அம்மனின் வாக்கை கனிவுடன் ஏற்ற அரசன் உடனே “தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் திருக்கோவிலை” கட்டினார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரை, மாலை 2.00 மணி முதல் இரவு 9.00 வரை.

கோயில் முகவரி :

அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோவில்,
தொட்டியம்,
திருச்சி மாவட்டம்.
Tags:    

Similar News