செய்திகள்
திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

Published On 2021-10-08 11:30 GMT   |   Update On 2021-10-08 11:30 GMT
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). தனியார் நிறுவன காவலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் மாடியில் உள்ள அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை செல்வராஜ் எழுந்து பார்த்தபோது, அவரது மாடி அறையின் கதவு வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனைடுத்து அவர்கள் வந்து கதவை திறந்து விட்டனர். பின்னர், தனது கீழ் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நள்ளிரவில், அங்கு வந்த மர்ம நபர்கள் மாடி அறையின் வெளிப்புறமாக தாழ்பாள் போட்டு விட்டு அவரது கீழ் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு 3 அறைகளில் இருந்த பீரோக்களை சாவி போட்டு திறந்து அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News