உள்ளூர் செய்திகள்
குன்னம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, கே.எறையூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). விவசாய தொழிலாளியான இவர், நேற்று மாலை தனது வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றார்.
கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, ராமசாமி திடீர் என தண்ணீரில் மூழ்கினார். குளிக்க சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் ராமசாமியை தேடி கிணற்றுக்கு வந்தனர்.
அப்போது, அவரது சட்டை மற்றும் துண்டு மட்டும் கிணற்றின் கரை ஓரத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, கிணற்றில் இறங்கி இறந்த நிலையில் மிதந்த ராமசாமியின் உடலை மேலே கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த மருவத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.