உள்ளூர் செய்திகள்
கைது

சிறுமியிடம் பாலியல் சீண்டல்- தெருக்கூத்து கலைஞர் கைது

Published On 2022-04-17 10:19 GMT   |   Update On 2022-04-17 10:19 GMT
பண்ருட்டி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தெருக்கூத்து கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன் குப்பம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் இவர் தனியாக அதே பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். சிறுமி தனியாக இருந்ததை நோட்டமிட்டு அங்கு வந்த தெருக்கூத்து கலைஞர் ஒருவர் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக நபர் ஒருவர் வருவதைப் பார்த்த தெருக்கூத்து கலைஞர் அந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்து கலைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விஜய் என்பதும் அவர் கீழ்காங்கேயன்குப்பம் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் விழாவில் தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு வந்ததும் தெரியவந்தது.

Tags:    

Similar News