செய்திகள்
குமார்

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2021-02-23 17:48 GMT   |   Update On 2021-02-23 17:48 GMT
திருமண ஆசை வார்த்தைக்கூறி 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள சோலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மகன் குமார்(வயது 21). கூலி தொழிலாளி. இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையில் அவர்களுக்கு இடையே இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் கடந்த 7-ந் தேதி திருமண ஆசை வார்த்தைக்கூறி அந்த சிறுமியை அவர் கடத்தி சென்றார். தொடர்ந்து கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, அந்த சிறுமியுடன் குமார் தங்கி இருந்தார். அப்போது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த நிலையில் சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர். அப்போது செல்போன் எண் மூலம் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவைக்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர். மேலும் திருமண ஆசை வார்த்தைக்கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்த குமாரையும் பிடித்தனர். தொடர்ந்த வழக்கு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

Similar News