ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு சபரிமலையில் பக்தர்கள் அனுமதி

Published On 2020-10-16 07:56 GMT   |   Update On 2020-10-16 07:56 GMT
ஐப்பசி மாத பூஜைக்காக நடை இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்கு பிறகு சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜைக்காக நடை இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்கு பிறகு சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு பிறகு சபரிமலையில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. 21-ந் தேதி வரை நடைபெற உள்ள மாத சிறப்பு பூஜைகளையொட்டி சாமி தரிசனத்திற்கு தினசரி 250 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தங்களது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மலை ஏறும் போது முக கவசம் அணிய தேவை இல்லை. மற்ற நேரங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். ஆனால் மலை ஏற உடல் தகுதி இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கூட்டம், கூட்டமாக மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் மருத்துவ வசதிகள் தயாராக உள்ளது. பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் குளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக சானிடைசர் கைவசம் வைத்திருக்க வேண்டும். வடசேரிக்கரை, எருமேலி வழியாக மட்டுமே பக்தர்கள் செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News