செய்திகள்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்- 800 இடங்களில் கண்காணிப்பு கேமரா

Published On 2019-10-09 06:19 GMT   |   Update On 2019-10-09 06:19 GMT
மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் (11-ந்தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார்.

11-ந்தேதி பிற்பகலில் 2 தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்கள். பின்னர் கடற்கரை கோவில் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதற்காக மாமல்லபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபரின் வருகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து வந்துள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளும், டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள மத்திய பாதுகாப்பு குழுவினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். கடலோர பகுதிகள் முழுவதிலும் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


கிண்டியில் இருந்து மாமல்லபுரத்துக்கு சுமார் 50 கி.மீ. தூரம் காரிலேயே சீன அதிபர் பயணம் செய்கிறார். இதற்காக அவர் செல்லும் சாலைகளில் வழி நெடுக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சீன அதிபரின் பாதுகாப்புக்காக தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சீன அதிபருக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

சீன பாதுகாப்பு அதிகாரிகளும், மத்திய பாதுகாப்பு குழுவினரும் தங்களது கண்காணிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளனர். இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் சோதனை நடத்த கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் தங்கியுள்ள திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் சேலையூரில் 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று திபெத் பேராசிரியர் ஒருவரும் கைதானார்.

திபெத்தியர்களின் எதிர்ப்பால் சீன அதிபரின் வருகையின் போது எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்படுகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரில் இந்த கடிதம் எழுதப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. சீன அதிபரின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.


இதற்காக மாமல்லபுரத்தில் 800 கேமராக்களை நிறுவி அதன் மூலமும் கண்காணித்து வருகிறார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதத்தை எழுதிய நபர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிப்பதற்கும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர்.

இவர்களுடன் 200-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

பிரபல சிற்பக்கூடங்கள், பூங்கா, குடவரை கோயில்கள் இருக்கும் மலைப்பகுதி, கடற்கரை, மேம்பாலம் மற்றும் புலிக்குகை, பிடார ரதம் என அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதணை நடத்தி வருகிறார்கள்.

மாமல்லபுரம் நகரின் உள்ளே வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களும் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
Tags:    

Similar News