ஆன்மிகம்

கண்கண்ட தெய்வம் சீரடி சாய்பாபா

Published On 2016-04-28 09:34 GMT   |   Update On 2016-04-28 09:34 GMT
சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.
சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.

16 வயதுக்குப் பிறகே பாபாவை மக்கள் அறிந்து கொள்ள தொடங்கினார்கள். அதற்கு முன்பு பாபா எப்படி வாழ்ந்தார் என்பதற்கு நிறைய தகவல்கள் இல்லை.

இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய பக்கீரிடம் வளர்ந்து, வேங்குசா என்ற மகானை குருவாக ஏற்று அவர் அரிய சக்திகள் பெற்றார் என்று பாபாவின் தோற்றம் பற்றி எல்லா நூல்களிலும் பொதுவான குறிப்புகள் உள்ளன. வேங்குசாவை குருவாக ஏற்று அவரோடு 12 ஆண்டுகள் வாழ்ந்ததை பாபாவே உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆண்டுகள் அவர் முஸ்லிம் பக்கீரிடம் வாழ்ந்தார் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்த பூமியில் தோன்றிய அவதார நிகழ்வு மட்டும் புரியாத புதிராக உள்ளது.

பாபா பக்தர்களால் புனித நூலாக கருதப்படும் “சாயி சத் சரிதம்” நூலிலும், பாபாவின் தோற்றம் பற்றிய முழு விபரம் இல்லை.
பாத்ரி கிராமத்தில் இந்து குடும்பத்தில் பாபா பிறந்தார் என்ற ஒரே ஒரு வரி மட்டுமே திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. அதில் ஒரு தெளிவு ஏற்படும் வகையில், 1990-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28- ந்தேதி புட்டபர்த்தி சாய்பாபா உரையாற்றிய போது சீரடி சாய்பாபா அவதாரம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டார்.

சீரடி சாய்பாபாவின் பெருமையை உணரச் செய்யும் அந்த தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள்....

மராட்டிய மாநிலம் பாத்ரி கிராமத்தில் கங்கா பாவத்யா - தேவகிரியம்மா என்ற தம்பதி வசித்து வந்தனர். தீவிர சிவ பக்தர்களான அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை.

ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. படகோட்டியான கங்கா பாவத்யா, தன் படகை பத்திரப்படுத்த ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். வீட்டில் தேவகிரியம்மா மட்டும் இருந்தார்.

அப்போது, வயதான ஒருவர் வந்து கதவை தட்டினார். தேவகிரியம்மா கதவைத் திறந்து “என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த முதியவர், “மழை அதிகம் பெய்வதால் இன்றிரவு மட்டும் இங்கு தங்கிக் கொள்கிறேன்” என்றார். “சரி” என்று கூறிய தேவகிரியம்மா திண்ணையில் அவரை படுத்துக் கொள்ள அனுமதித்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத்தட்டி தேவகிரியம்மாவை எழுப்பிய அந்த முதியவர், “பசிக்கிறது, சாப்பிட ஏதாவது தாருங்கள்” என்றார். உடனே அவருக்கு தேவகிரியம்மா சாப்பாடு கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டிய அந்த முதியவர், “எனக்கு கால்கள் வலிக்கிறது. சற்று பிடித்து விடு” என்றார். இதைக் கேட்டதும் தேவகிரியம்மா அதிர்ச்சி அடைந்தார்.

பணம் வாங்கிக் கொண்டு யாராவது அவருக்கு கால் பிடித்து விட வருவார்களா என்று தேடிப்பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை.
அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் தேவகிரியம்மா தவித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் கதவுத் தட்டப்பட்டது.
இந்த தடவை ஒரு பெண் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவள், “இந்த முதியவருக்கு நான் பணிவிடை செய்யட்டுமா?” என்றாள்.
மகிழ்ச்சி அடைந்த தேவகிரியம்மா, “சரி செய்யுங்கள்” என்று கூறி பணம் கொடுத்து விட்டு, வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.

வெளியில் இருந்த முதியவரும், பெண்ணும் உண்மையில் பரமசிவனும், பார்வதியும் ஆவார்கள். அவர்கள் இருவரும் தேவகிரியம்மாவின் குறையை தீர்க்க முடிவு செய்தனர்.

அவர்கள் மீண்டும் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை.
வெளியில் பரமசிவனும், பார்வதியும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தேவகிரியம்மா இறைவன், இறைவி முன்பு விழுந்து வணங்கினார்.

அவரை ஆசீர்வதித்த இறைவன், “உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும். மூன்றாவது குழந்தையாக நானே உன் வயிற்றில் பிறப்பேன்” என்று ஆசி கூறி மறைந்தனர்.

தேவகிரி யம்மாவுக்கு நடப்பது கனவு போல இருந்தது. கங்கா பாவத்யா வீடு திரும்பியதும் நடந்ததை கூறினார். ஆனால் கங்கா பாவத்யா அதை நம்பவில்லை.

சில தினங்களில் தேவகிரியம்மா கர்ப்பமடைந்தார். முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஓராண்டு கழித்து பெண் குழந்தை ஒன்றை தேவகிரியம்மா பெற்றெடுத்தார். மூன்றாவது முறை தேவகிரியம்மா கர்ப்பம் தரித்த போது கங்கா பாவத்யாவுக்கு ஈசன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

தேவகிரியம்மாவுக்கு காட்சி கொடுத்த ஈசன் தனக்கும் காட்சி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தேவகிரியம்மா அவரைப்பின் தொடர்ந்தார்.

தம்பதியர் இருவரும் காடு - மேடுகளில் அலைந்து திரிந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவகிரியம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் அதை கண்டு கொள்ளாமல் கங்கா பாவத்யா சென்று கொண்டிருந்தார். இதனால் தேவகிரியம்மா அந்த குழந்தையை அரசமர இலைகளில் சுற்றி காட்டுக்குள்ளேயே போட்டு விட்டு கணவரை பின் தொடர்ந்து சென்று விட்டார்.

முஸ்லிம் பக்கீர் ஒருவர் அந்த குழந்தையை கண்டெடுத்து மன்வாத் கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு சென்றார். அவர் பாலபாபாவை 4 ஆண்டுகள் வளர்த்தார். பிறகு அவர் அந்த சிறுவனை வேங்குசாவிடம் ஒப்படைத்தார்.

அந்த குழந்தைதான் சீரடி சாய்பாபா!

இவ்வாறு புட்டபர்த்தி சாய்பாபா கூறிய நிகழ்வு சில நூல்களில் உள்ளது. இதை சிலர் ஏற்கிறார்கள். சிலர் மறுக்கிறார்கள்.
சாய்பாபாவின் அவதார மூலத்தை கண்டுபிடித்து விட அன்று தொடங்கி இன்று வரை எத்தனையோ பேர் முயன்று பார்த்து விட்டனர். யாராலும் ஒரு துகள் அளவு தகவலை கூட பெற முடியவில்லை.

சாய்பாபாவின் அவதாரம் என்பது ஆழ்ந்த எல்லையற்ற பெருங்கடல் போன்றது. அந்த பெருங்கடலில் மூழ்கி நாம் பக்தி, ஞானம், மனப்பக்குவம் உள்ளிட்ட பல்வேறு முத்துக்களை எடுத்துப் பயன்பெறலாம். ஆனால் ஒரு போதும் அந்த பெருங்கடலின் கரையை காண இயலாது.

சில ஆய்வாளர்கள் பாத்ரி கிராமத்தின் பழைய ஆவணங்களை எல்லாம் ஒன்று விடாமல் புரட்டி பார்த்து, படித்து சீரடி சாய் நாதனின் பிறப்பை கண்டு பிடித்து விடலாம் என்று எவ்வளவோ முயன்றனர். நிறைய பேருக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஒரு ஆய்வாளர், “பாத்ரி கிராமத்தின் புறநகர் பகுதி போல திகழும் கும்கர் பவ்டியின் எனும் குளக்கரையில்தான் பாபா பிறந்தார். அவர் பரத்வாஜ கோத்ரத்தை சேர்ந்தவர்” என்றார். ஆனால் அதற்கு அவரால் ஆதாரம் காட்ட இயலவில்லை.

மற்றொரு ஆய்வாளர் கூறுகையில், “பாத்ரி கிராமத்தில் உள்ள வைஷ்ணவ கல்லி எனும் பகுதியில் இருக்கும் 4-423-6 என்ற எண் கொண்ட வீட்டில் பிராமண பூசாரி குடும்பத்தில் சாய்பாபா பிறந்தார்” என்றார். ஆனால் அவராலும் அதற்கு எந்த சான்றையும் காட்ட முடியவில்லை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சீரடி சாய்பாபா பற்றிய இத்தகைய ஆய்வுகள் சூடு பிடித்த பிறகே பாத்ரி நகர மக்கள், உலகமே புகழும் அவதாரப் புருஷர் தங்கள் ஊரில் அவதரித்ததை போற்றி பெருமை கொண்டனர்.

இந்த நிலையில் 1972-ல் சாய் பக்தரும் ஆய்வாளருமான வி.பி.கெர் என்பவர் பாத்ரியில் மிக விரிவான ஆய்வை நடத்தினார். சாய்பாபா தன்னிடம் மிகவும் நெருக்கமாக இருந்த மகல்சபாதியிடம் கூறிய சில தகவல்களின் அடிப்படையில் அந்த ஆய்வு நடந்தது.

பாத்ரியில் உள்ள பிராமண குடும்பங்கள் அனைத்தையும் கெர் ஆய்வு செய்த போது யஜீர்வேதி தேஷஸ்தா என்ற பிரமாண பூசாரி குடும்பம் பற்றிய தகவல்கள் சாய்பாபா கூறிய தகவல்களுடன் ஒத்துப்போனது. அந்த பிராமண பூசாரி குடும்பத்தை சேர்ந்த ரகுநாத் என்பவர் பேராசிரியராக இருந்தார்.

அவர் அளித்த சில தகவல்கள் மூலம் சாய்பாபா பிறந்த போது ஹரிபாவ் பூசாரி என்று பெயரால் அழைக்கப்பட் டிருப்பது தெரிந்தது. சாய்பாபா சிறுவயதில் அனுமன் பக்தராக இருந்தார் என்றும் ஆய்வில் தெரிந்ததாக கூறப்பட்டது.

இவற்றை தொகுத்து வி.பி.கெர் - டெல்லி ஸ்டெர்லிங் பதிப்பகம் மூலம் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் அவராலும் சாய்பாபா பிறப்பை துல்லியமாக சொல்ல இயலவில்லை.

இதற்கிடையே பாத்ரி கிராமத்தில் தான் சாய்பாபா பிறந்தார் என்று 1975-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து “ஸ்ரீசாய் சம்ரக் சமிதி” (சாய் நினைவாலய கமிட்டி) என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.
சாய்பாபா பிறந்ததாக கூறப்படும் வீட்டின் ஒரு பகுதியை விலை கொடுத்து வாங்கினார்கள். அங்கு 1994-ம் ஆண்டு சாய்பாபாவுக்கு கோவில் கட்டும் பணி தொடங்கியது.

1999-ல் கட்டுமானப் பணிகள் முடிந்து அக்டோபர் 19-ந் தேதி “ஸ்ரீசாய் ஜன்மஸ்தன் மந்திர்” (சாய்பாபா பிறந்த இடத்து ஆலயம்) திறக்கப்பட்டது.

தற்போது அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள்.

என்றாலும் சீரடி சாய்பாபாவின் அவதார தொடக்கத்தை மிகத் துல்லியமாக இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் புரியாத புதிர் நீடிக்கிறது.

விஞ்ஞான அடிப்படையில் சமீபத்தில் சாய்பாபா அவதார நிகழ்வை கண்டுபிடிக்க சிலர் முயன்றனர். அவர்களுக்கும் தோல்வியே மிஞ்சியது.

மக்களை பக்குவப்படுத்த வந்த அந்த மகானின் அவதார ரகசியத்தை கண்டறிய முயற்சி செய்வது வீண் வேலை என்று பலரும் உணர்ந்தனர். எனவே நாமும் அந்த சிந்தனையை கைவிட்டு விடலாம்.

1854-ம் ஆண்டு குரு வேங்குசாவின் சைலு ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய பாபா பல இடங்களில் அலைந்து திரிந்தார். சில வாரங்களில் அவர் கால்கள் சீரடி நோக்கி தாமாக நடந்தன.

ஒரு நாள் பாபா சீரடியை சென்றடைந்தார். சீரடியில் அவருக்கு அங்குள்ள வேப்ப மரம்தான் பிடித்தமான இடமாக இருந்தது. அங்கு போய் பாபா அமர்ந்து விட்டார். அப்போது சில அற்புதங்கள் நடந்தன. 

Similar News