ஆன்மிகம்
துர்க்கை அம்மன்

துன்பம், திருமண தடை போக்கும் துர்க்கை அம்மன்

Published On 2020-12-23 03:57 GMT   |   Update On 2020-12-23 03:57 GMT
இளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.
அம்மன் வழிபாடுகள் அநேகம் இருந்தாலும், துர்க்கை அம்மனை ராகு காலத்தில் போற்றிப் பாடி அபிஷேகம் ஆரத்தியுடன், எலுமிச்சைப்பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷமானதாக இருக்கிறது. கொடிய அசுரனை வதம் செய்த சக்தியின் அம்சமான துர்க்கையம்மன், தங்கள் பாவங்களையும் வதம் செய்து வாழ்வில் நிம்மதி தருவாள் எனும் நம்பிக்கையே, இதற்கு காரணம்.

ராகு கிரகத்தால் பூஜிக்கப்பட்டு அந்த கிரகத்திற்கு அருள்புரிந்த காரணத்தினால், சண்டி பாடத்தின் தலையாய சக்தியாக இருக்கும் துர்க்கை அம்மன், ‘மங்கள சண்டி’ என்றும், ‘ராகுகால துர்க்கை’ என்றும் போற்றப்படுகிறாள். இளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.

துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (தடைகளை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாவத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயத்தை அழிப்பவள் என்பது பொருளாகும்.

துர்க்கையை, ஒன்பது துர்க்கைகளாக பெயரிட்டு அழைக்கிறது, மந்திர சாஸ்திரம். அவை: குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்கா, சுபத்ரா ஆகும் .

மகத்தான சுவாஸினி பூஜையிலும் 1.சைலபுத்ரி, 2.ப்ரம்ஹசாரிணி, 3.சந்த்ரகண்டா, 4.கூஷ்மாண்டா, 5.மகாகவுரி, 6.காத்யாயனி, 7.காளராத்ரி, 8. மகாகவுரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.

அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்து, சிவப்பு வஸ்திரத்தை அம்மனுக்கு அணிவித்தால் சிறப்பு. துர்க்கை அம்மனை நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கு மனத்தளர்ச்சியோ, வேதனைகளோ, பயமோ தோன்றுவதில்லை. மாறாக எதையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகிறாள் அன்னை துர்க்கா தேவி.

சிம்ம வாகனத்தில் அமர்ந்து, கொடியில் அசையும் மயில் தோகையுடன் சிவப்பு நிறப் புடவையில் சர்வ அலங்கார ரூபிணியாக, கையில் சூலத்துடன் வீற்றிருக்கும் அன்னை துர்க்காதேவியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகுகாலத்தில் பக்தியுடன் விளக்கேற்றி வேண்டினால் நினைத்த காரியம் வெற்றியாவது உறுதி.

சேலம் சுபா.
Tags:    

Similar News