செய்திகள்
நகை பறிப்பு

தேனி அருகே பரிகாரம் செய்வதாக கூறி நகையை பறித்த ஜோதிடர்

Published On 2020-02-27 11:48 GMT   |   Update On 2020-02-27 11:48 GMT
தேனி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகையை பறித்து மோசடி செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி அருகில் உள்ள கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கத்தேவர் 4-வது தெருவை சேர்ந்த மனோகரன்(51). சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அங்குவந்த ஒருவர் தான் ஜோதிடர் எனவும் வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர பரிகாரம் செய்தால் அது நிவர்த்தியாகிவிடும் எனவும் கூறியுள்ளார். பின்னர் மனோகரனின் மனைவியிடம் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை வாங்கி அதனை புளி உருண்டையில் வைத்து செம்பு பாத்திரத்தில் கொடுத்து பூஜை அறையில் வைத்து வழிபடுமாறு கூறியுள்ளார்.

ஜோதிடர் கூறியபடி பூஜை அறையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது புளி உருண்டைக்குள் தங்கசெயினை காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை தேடிச்சென்றனர். பழனிசெட்டிபட்டி தனியார் மருத்துவமனை அருகில் அந்த ஜோதிடர் இருந்தது தெரியவந்தது.

அவரை பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கண்ணன் மகன் முத்து(30) என தெரியவந்தது. அவரிடமிருந்த இரண்டரை பவுன் தங்கசெயினை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து இதுபோல் வேறுஏதேனும் நகை மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News