செய்திகள்
அச்சு வெல்லம்

வரத்து குறைவால் அச்சு வெல்லம் விலை உயர்வு

Published On 2021-11-21 10:19 GMT   |   Update On 2021-11-21 10:19 GMT
வரத்து குறைவால் அச்சு வெல்லம் விலை உயர்ந்தது. அதன்படி 30 கிலோ கொண்ட சிப்பம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நொய்யல்:

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம், நல்லிக்கோவில், மூலிமங்கலம், நஞ்சை புகளூர், முத்தனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். தயாரிக்கப்பட்ட அச்சு வெல்லங்களை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக ஆக்குகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் விற்பனை ஏல மண்டிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

தொடர் மழையின் காரணமாக அச்சு வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெல்ல சிப்பங்கள் குறைந்த அளவே ஏலத்திற்கு வந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி சென்றனர்.

அதன்படி கடந்த வாரங்களில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும், அச்சுவெல்லம் ரூ.1250-க்கும் விற்பனையானது. இந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,350-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,500-க்கும் விற்பனையானது.
Tags:    

Similar News