ஆட்டோமொபைல்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைமை பொறுப்பேற்ற சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவரா அந்நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக நியமிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா செப்டம்பர் 1, 2018 முதல் தலைமை நித அலுவலராக பணியாற்ற இருக்கிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக துறையில் பட்டமேற்படிப்பை நிறைவு செய்த திவ்யா, ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார். இவர் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கடந்த சில ஆண்டுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட திவ்யா முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
13 ஆண்டுகளாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திவ்யா நிறுவனத்தின் நன்மதிப்பு உயர பல்வேறு உதவிகளை செய்திருப்பதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டு நிறுவனத்தின் நிதி துறையில் துணை தலைவராக பதவியேற்ற திவ்யா முதலீடு குறித்த பணிகளில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.
தலைமை நிதி அலுவலர் பதவியேற்றதும் திவ்யா, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மேரி பாராவின் கீழ் பணியாற்றுவார். "திவ்யாவின் அனுபவம் மற்றும் நிதி துறை சார்ந்த பல்வேறு பணிகளில் இவரது தலைமை நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது," என மேரி பாரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
புகைப்படம்: நன்றி gm.com