செய்திகள்
பிடிபட்ட பாம்பு குட்டிகள்

கட்டிட தொழிலாளி வீட்டில் பாம்பு குட்டிகள்- பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2020-09-15 10:13 GMT   |   Update On 2020-09-15 10:13 GMT
பாகூரில் கட்டிட தொழிலாளி வீட்டில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை சமூக ஆர்வலரான விக்னேஷ் லாவகமாக பிடித்தார்.
பாகூர்:

பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் புவியரசன் (வயது 25) கட்டிட தொழிலாளி. இவர் தனது தாயாருடன் சிமெண்ட் சீட்டால் கூரை வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் நேற்று காலை பாம்பு குட்டிகள் ஊர்ந்து சென்றதை பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி பாம்பு பிடிக்கும் சமூக ஆர்வலரான விக்னேஷ் என்பவரை அங்கு வரவழைத்தனர். அங்கு அவர் பாம்பு குட்டிகள் இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தார். அப்போது அங்கு ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்ததும், அவை நல்ல பாம்பு வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. அங்கிருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை விக்னேஷ் லாவகமாக பிடித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிட்டு குட்டிகளை ஈன்ற நல்ல பாம்பு இரை தேடி அங்கிருந்து வெளியே சென்று விட்ட நிலையில் பாம்பு குட்டிகள் வெளியே வந்து இருப்பது தெரியவந்தது. குட்டிகளை தேடி தாய் பாம்பு எப்போது வேண்டுமானாலும் அங்கு வரலாம் என அந்த பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நல்ல பாம்பு குட்டிகள் பிடிபட்டது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்து 5 மணி நேரமாகியும் அவர்கள் வராததால் பாகூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாம்பு குட்டிகளை பாதுகாப்பாக விட்டனர்.
Tags:    

Similar News