செய்திகள்
பல்லடம் அருகே புதிய உளுந்து ரகம் வெளியீடு
வளர்ச்சி ஊக்கியை இரண்டு கிலோ அளவில் 15 சதம் பூக்கும் தருணத்தில் ஒரு முறை அளிக்க வேண்டும்.
பல்லடம்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையம் மூலம் பொங்கலூரில் புதிய உளுந்து ரகம் 'வம்பன் - 11' வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பொங்கலூர் வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வம்பன் 11 உளுந்து ரகம் 70 நாள் வயதுடைய பயிர். மஞ்சள் தேமல் நோய்க்கு முழுமையான எதிர்ப்பு திறன் கொண்டது. இறவையில் எக்டருக்கு 940 கிலோ, மானாவாரியில் 865 கிலோ சராசரியாக மகசூல் கிடைக்கும்.
ஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ விதை போதுமானது.உயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா தலா 200 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் தலை மற்றும் மணிச்சத்து செடிகளுக்கு கிடைக்கும். களையை கட்டுப்படுத்த விதைத்த மூன்றாவது நாள் பென்டிமெத்தலின் ஏக்கருக்கு ஒரு லிட்டர் பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தலாம்.
வளர்ச்சி ஊக்கியை இரண்டு கிலோ அளவில் 15 சதம் பூக்கும் தருணத்தில் ஒரு முறை அளிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு டிரைகோடெர்மா விரிடி, 4 கிராம் பேசில்ஸ், சப்டிலிஸ் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூஞ்சான், பாக்டீரியா சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்படும்.
ஒரு களை எடுப்பதன் மூலம் களை கட்டுப்படும். நல்ல காற்றோட்டம் கிடைக்கும். செடி செழிப்பாக வளரும். இது போன்ற தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் உளுந்து ரகங்களில் அதிக மகசூல் எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.