தொழில்நுட்பம்
சர்வதேச சந்தையில் புது உச்சம் தொட்ட மைக்ரோசாப்ட்
சர்வதேச பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவன மதிப்பு புது உச்சத்தை தொட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச பங்குச் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,48,50,100 கோடிகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் மட்டுமே பங்குச் சந்தையில் இத்தகைய மதிப்பை எட்டியது.
உலகளவில் 2 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பை ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் என இரு நிறுவனங்கள் மட்டுமே எட்டியுள்ளன. முன்னதாக 2019 டிசம்பர் மாத வாக்கில் சவுதி அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு 1.9 ட்ரில்லியன் அளவு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்ற சத்ய நாதெல்லா அந்நிறுவன வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு அழைத்து சென்றார். இவரது தலைமையில் கிளவுட்-கம்ப்யூட்டிங் மென்பொருள் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக மைக்ரோசாப்ட் உயர்ந்தது.
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சத்ய நாதெல்லா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக மைக்ரோசாப்ட் தலைவராக இருந்த ஜான் தாம்ப்சன் தற்போது அந்நிறுவனத்தின் மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டார்.