செய்திகள்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது- ஒரே நாளில் 2104 பேர் பலி
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22.91 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 3 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 2,104 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,657 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,54,880 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,78,841 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,91,428 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 13,23,30,644 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 27,27,05,103 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16,51,711 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.