செய்திகள்
உக்ரைனில் எரிபொருள் தீர்ந்ததால் தரையில் விழுந்த சரக்கு விமானம்: 5 பேர் பலி
உக்ரைனில் வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் எரிபொருள் தீர்ந்ததால் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.
கீவ்:
உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 8 பேர் பயணித்தனர்.
பயண தூரம் மிகவும் அதிகம் என்பதால் உக்ரைன் நாட்டின் லிவில் நகரில் உள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து துருக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், துருக்கியின் லிவில் விமான நிலையத்தை அடைய 1 கி.மீ தொலைவு இருந்தபோது விமானத்தின் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்டது. இதனால் விமானம் வானத்தில் இருந்து தரையை நோக்கி வேகமாக விழத்தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை புல்வெளியில் தரையிறக்க முயற்சித்தார். ஆனால் விமானம் அவரது கட்டுப்பாட்டை இழந்து காட்டுப்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு விமானத்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இந்த விபத்து குறிந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.