செய்திகள்
போலீசார் விசாரணை

கொளத்தூர் அருகே குடும்ப பிரச்சனையால் வயதான தம்பதி தற்கொலையா?- போலீசார் விசாரணை

Published On 2019-10-04 04:43 GMT   |   Update On 2019-10-04 04:43 GMT
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலமலை வனப்பகுதியில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க ஆண் - பெண் பிணம் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தது ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை குரும்பை காடு பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து (வயது 70) அவருடைய மனைவி ஜெயம்மாள் (65) என்பது தெரியவந்தது.

மேலும் 2 பேரும் மாயமானதாக ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவாகி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

பிணமாக கிடந்த தம்பதியின் உடல் அருகில் வி‌ஷப்பாட்டில்கள் கிடந்ததால் அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். குடும்ப தகராறில் இந்த தம்பதியினர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு முனுசாமி என்ற மகன் உள்ளார். அவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News