செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 391 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 487 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 8 பேர் பலியாகி இருந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்று தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. புதிதாக 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து197 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 391 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 487 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி கிராமத்தை சேர்ந்த 30 வயது ஆண், அதே கிராமத்தை சேர்ந்த 50 வயது பெண், குருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண், அதே கிராமத்தை சேர்ந்த 30 வயது ஆண் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரிமளம் ஒன்றியத்தில் கொரோனா தொற்று முழு ஊரடங்கு காரணமாக வெகுவாக குறைந்துள்ளது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 74 ஆக குறைந்த நிலையில் 351 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.