செய்திகள்
தோல்வியை மறைக்க ஆதாரமின்றி மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதற்கும், மக்கள் கைது செய்யப்படுவதற்கும் மெகபூபா முப்தி மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இதுபோன்ற சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் பள்ளிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு ஆசிரியர்களை சுட்டுக்கொலை செய்தனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, தொடர்புடைய நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காஷ்மீரில் சமீப நாட்களாக நடைபெற்று வரும் கொலைகள் கவலை அளிக்கிறது. இது அரசின் தோல்வி. அதை மறைப்பதற்காக எந்தவித ஆதாரமின்றி மக்களை கைது செய்து வருகின்றனர். கைது நடவடிக்கை தொடர்ந்தால் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். இதற்கு ஒவ்வொருவரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.