செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு பி.பி.இ.,கிட் வழங்க கோரிக்கை
கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளை அகற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு முறையாக பி.பி.இ., கிட் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை,
கொரோனா தொற்றால் பாதித்தவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக, தினமும் அதிகப்படியான மருத்துவக்கழிவுகள் சேகரமாகின்றன.ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் சில மருத்துவமனைகளில் மருத்துவக்கழிவுகள் முறையாக கையாளப்படாமல், எந்தவிதமானபாதுகாப்புமில்லாமல் அகற்றப்படுவதாக புகார் எழுகின்றன.
இக்கழிவுகளை அகற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு முறையாக பி.பி.இ., கிட் வழங்கப்படுவதும் கிடையாது.முகக்கவசம் மற்றும் கையுறையை மட்டுமே பயன்படுத்தி மருத்துவக்கழிவுகள் அகற்றப்படுகின்றன.
இது குறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறியதாவது:-
கொரோனா சிகிச்சை மருத்துவக்கழிவுகளை ஒன்று சேர சேகரம் செய்யும் போது, பி.பி.இ., கிட் தேவை. ஆனால், சில மருத்துவமனைகளில் பி.பி.இ., கிட் அணியாமல் தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.எனவே துறை ரீதியான அதிகாரிகளின் ஆய்வு அவசியம். தூய்மைப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பி.பி.இ., கிட் இல்லாத காரணத்தால், கொரோனா வார்டுகளில், கிருமி நாசினி தெளிப்பு போன்ற தூய்மைப்பணியும் பாதிக்கிறது.நோயாளிகளும் பாதிக்கின்றனர்.
கொரோனா சிகிச்சை மையங்களில் தூய்மைப்பணியில் ஈடுபடுவோருக்கு முறையாக பி.பி.இ., கிட் வழங்க வேண்டும் என்றனர்.