கோவை அருகே வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட தாய்-குட்டி யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது
கவுண்டம்பாளையம்:
மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப்பகுதியில் உள்ள பொன்னூத்தம்மன் மலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் தாய் யானை இறங்கியது. சமவெளி பகுதியில் 6 தோட்டத்தை சேதப்படுத்தியது.
பின்னர் துடியலூர் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது33). என்பவரது வீட்டின் சமையல் அறையில் நுழைந்து துவம்சம் செய்தன. வனத்துறை விடியவிடிய போராடி பொன்னூத்தம்மன் மலை மலையில் விரட்டி விட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவும் தாயுடன் குட்டி யானை கோவை தடாகம், காளையனூர், சோமையனூர், திருவள்ளுவர் நகரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தன.
இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விடியவிடிய போராடி இந்த முறை அனுவாவி சுப்பிரமணியசாமி கோவில் பகுதிக்கு விரட்டி விட்டனர்.
குட்டியுடன் தாய் யானை தொடர்ந்து 10 நாட்களாக இந்த பகுதிக்கு வந்து செல்கிறது. உயிர்சேதம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.