வயநாடு அருகே மலை கிராமத்திற்குள் சுற்றி திரியும் புலி - உயிருடன் பிடிக்க வனத்துறை நடவடிக்கை
திருவனந்தபுரம்:
கேரளாவில் பல்வேறு உள்ள வயநாடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.அங்குள்ள காட்டுப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இவை சில நேரங்களில் பொது மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.
இந்த நிலையில் வயநாடு குருக்கன் மூலா பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் புலி ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த புலி கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உலவியது. மேலும் விவசாயிகள் வளர்க்கும் சில வீட்டுப்பிராணிகளையும் அடித்து கொன்றது. இதனால் இந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.அவர்கள் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் வனத்துறை ஊழியர்களிடம் புலி சிக்கவில்லை.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் வைத்திருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.அதில் மறைவான வனப்பகுதியான பெகுர் பகுதியில் புலி சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் புலியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விரைவில் உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.