தொழில்நுட்பம்
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக சிறப்பு விற்பனையை நிறுத்திய அமேசான்
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதனை அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
நாட்டில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அமேசான், கூகுள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் துவங்கி, அவற்றை இலவசமாக இந்தியா கொண்டு வருவது என பலவிதங்களில் உதவிகளை செய்து வருகின்றன.
வழக்கமாக அமேசான் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் தனது வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகை, தள்ளுபடி, வங்கி சார்ந்த கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படும்.