செய்திகள்
அமித்ஷா

மத்திய மந்திரி அமித்ஷா நாளை சென்னை வருகை - மெட்ரோ ரெயில் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2020-11-19 19:15 GMT   |   Update On 2020-11-19 19:15 GMT
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.
சென்னை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார். அப்போது, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதுடன் மெட்ரோ ரெயில் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர் மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.

விமான நிலையத்தில், மத்திய மந்திரி அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். பின்னர், அங்கிருந்து காரில் புறப்படும் அமித்ஷா, ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 2 மணிக்கு வருகிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். அங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

மேலும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில், மத்திய மந்திரி அமித்ஷா, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி விழா பேருரை ஆற்றுகிறார்.

விழா முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார். அங்கு இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அமித்ஷா சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்டக் குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் மத்திய மந்திரி அமித்ஷா பேட்டியளிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், மறுநாள் (22-ந்தேதி) காலை 10 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் மத்திய மந்திரி அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவரது வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், கலைவாணர் அரங்கம் உள்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய மந்திரி அமித்ஷாவின் வருகையையொட்டி, தமிழக பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News