செய்திகள்
சுகாதார பராமரிப்பு - அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவு
அங்கன்வாடி மையத்தில் சமையல் கூடமும் பாத்திரங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். முட்டை மற்றும் உணவு பொருட்கள் தரமாக இருப்பதை ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும்.
திருப்பூர்:
சென்னையில் அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி இறந்ததை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் அசைவ உணவகம், பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களிலும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அங்கன்வாடி மையங்களில் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர். உணவு பொருட்களின் தரம், உணவின் தரம், சத்துமாவு பார்சல்களின் காலாவதி தேதி விவரங்களை சரிபார்த்து, ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அங்கன்வாடி மையத்தில் சமையல் கூடமும் பாத்திரங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். முட்டை மற்றும் உணவு பொருட்கள் தரமாக இருப்பதை ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும்.
உணவு பொருள் சேமிப்பு அறை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி, வடிகட்டி வழங்க வேண்டும். பணியாளர் தூய்மையாக ஆடை அணிய வேண்டும்.
அனைவரும் இரண்டு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் கீரைகளை கொதிக்க வைத்த தண்ணீரிலும், காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே சமைக்க வேண்டும்.
ஒவ்வொரு மையமும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து மையங்களும் உணவு பாதுகாப்பு சுகாதார மதிப்பீட்டு திட்டத்தில் சான்றிதழ் பெற முயற்சிப்பது அவசியம். இந்தாண்டு 5 மையங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.