கொரோனா கட்டுப்பாட்டை மீறியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம் வசூல்- சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை:
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள்.
எழும்பூரில் விதியை மீறி திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதித்த திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் இந்த மாதிரி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 7 திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதித்துள்ளார்கள்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் ஆட்களை அனுமதிப்பது, தனி நபர் இடைவெளியை பராமரிப்பது, முகக்கவசம் அணிய செய்தல் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
விதிகளை பின்பற்றாத தனிநபர்கள், உணவகங்கள், மளிகை கடைகள், இறைச்சி கூடங்கள், நிறுவனங்களிடம் இருந்து இதுவரை ரூ.6 கோடியே 38 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.